ஞாயிறு, ஜனவரி 30, 2011

‘சமச்சீர் கல்வி’ பாடநூற்கள் :- என்ன செய்யப் போகிறது? -மு.சிவகுருநாதன்

‘சமச்சீர் கல்வி’ பாடநூற்கள் :- என்ன செய்யப் போகிறது?     

-மு.சிவகுருநாதன்

 (மிகத் தாமதமாக ஒரு பதிவு)






         தமிழக அரசு சமச்சீர் கல்வி என்ற பெயரில் அரசுப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள் ஆகிய நான்கு வகையான பள்ளிகளுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டம் மற்றும் பாடநூற்கள் என்று திட்டமிட்டு 2010 - 2011 ஆம் கல்வியாண்டு முதல் முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு புதிய பாடநூற்கள்  அறிமுகம் செய்யப்பட்டன.  எஞ்சிய வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் (2011 - 2012) புதிய புத்தகங்கள் அச்சாகி வெளிவரக் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



            இந்த முறையிலிருந்து தப்பிக்க மெட்ரிக் பள்ளிகள் மத்திய அரசின் CBSE  பள்ளிகளாக மாற்றம் பெற்று வருகின்றன.   அரசின் பொதுப்பாடத்திட்டத்தை மட்டும் வைத்துக் கொண்டு தங்களுக்கான பாடநூற்களை தனியார் பள்ளிகளே தயாரித்துக் கொள்ள ஏதுவாக நீதிமன்ற உத்தரவைப் பெற்றிருக்கிறார்கள்.



            ‘சமச்சீர் கல்வி’ என்ற பெயருக்கும் உண்மையான சமச்சீர் கல்விக்கும் யாதொரு தொடர்புமுமில்லை.    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு மற்றம் மெட்ரிக் பள்ளிகளின் மதிப்பெண் பட்டியலில் சமத்துவம் பேணப்பட்டது.  நான்கு கல்வி வாரியங்களுக்கு ஒரே பாடநூல் என்பதே ‘சமச்சீர் கல்வி’ என்று கூட கூற வாய்ப்பில்லாத நிலையில் இந்த நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஒரே  பாடத்திட்டத்தின் (Syllabus) வாயிலாக ‘சமச்சீர் கல்வி’ என்று பேசக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.



            முதல் மற்றும் ஆறாம் வகுப்பிற்கான புதிய பாடநூற்கள் வெளியாகி ஓராண்டு முடியப் போகும் தறுவாயில் இவற்றைப் பற்றி நமது கல்வியாளர்களும் ஆசிரியர்களும் எழுத்தாளர்களும் எவ்வித கருத்துகளையும் வெளிப்படுத்தவில்லை என்பது வேதனைக்குரியது.   இது நமது சமூகம் கல்வியின் மீது கொண்டுள்ள அக்கறையின்மையை வெளிப்படுத்துகிறது.    தீராநதி ஆகஸ்ட் 2010இல் வெளியான மீனாவின் கட்டுரையும்


http://www.kumudam.com/magazine/Theranadi/2010-08-01/#  

காலச்சுவடு டிசம்பர் 2010 வெளியான வே. சுடர்ஒளியின் (இவர் முதல் வகுப்பு தமிழ்ப் பாடநூல் குழுவில் அங்கம் வகித்தவர்) கட்டுரையும் 


விதிவிலக்கானது.  இவ்விரண்டு கட்டுரைகளின் பெரும்பாலான கருத்துக்களுடன் நான் முற்றிலும் உடன்படுகிறேன்.   இப்பாட நூற்கள் பற்றிய வேறு சில கருத்துக்களை மட்டும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். 



            கோத்தாரி கல்விக் குழு (1964 - 66) அருகாமைப் பள்ளிகளை (Neighbourhood Schools) பரிந்துரை செய்தது.    இம்முறையின்படி உள்ளூர்ச் சூழல்களுக்குத் தகுந்தவாறு வட்டார அளவிலான பள்ளிகளும் பாடத்திட்டங்களும் அமைய வேண்டும் என்பதே கல்வியாளர்களின் விருப்பமாக இருந்தது.  எனவே பாடத்திட்டத்திற்கும் பாடநூற்களுக்கும் கல்விச் செயற்பாட்டில் முக்கிய பங்குண்டு என்பதை மறுக்க முடியாது.

            இப்புதிய பாடநூற்களை தயாரிக்க அமைக்கப்பட்ட குழுக்கள்,  அவற்றின் செயல்பாடுகள், அவற்றின் பின்னாலுள்ள அரசியல் ஆகியன விமர்சனத்திற்குள்ளாக்கப்பட வேண்டும்.   ஆறாம் வகுப்பு பாடநூற்கள் தயாரிப்பில் வல்லுநர் குழு, மேலாய்வுக் குழு தவிர்த்த பாடநூல் குழுவில் 5 பாடங்களுக்கும் சேர்த்து 58 பேர் உள்ளனர்.    இவர்களில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 27 பேர், ஈரோடு மாவட்டத்தில் 6 பேர் என 4 மாவட்டத்திற்கு மட்டும் 33 பேர் போக எஞ்சிய 25 நபர்கள் 15 மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.  13 மாவட்டங்களுக்கு பாடநூல் குழுவில் இடம் இல்லை.   கன்னியாகுமரி, மதுரை, நீலகிரி, தர்மபுரி போன்ற பல மாவட்டங்கள் புறக்கணிப்பிற்கு உள்ளாகியுள்ளன.



            முதல் வகுப்பு பாடநூல் குழுவிலும் இதே கதைதான்.  முதல் வகுப்பு 4 பாடநூற்களிலுள்ள பாடநூல் குழுவில் உள்ள 34 பேரில் 18 பேர்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்  மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.   ஒரு சிலர் மீதமுள்ள 14 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.   கன்னியாகுமரி, நீலகிரி, தர்மபுரி, கோவை, திருச்சி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்கள் அறவே ஒதுக்கப்பட்டுள்ளன.



            வட்டார அளவிலான பல்வேறு வேறுபாடுகளை கொண்ட தமிழகத்தின் முக்கிய இடங்களான நீலகிரி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களின் பங்கு இல்லாமல் எப்படி பாடநூல் குழு அமைக்கப்பட்டதென்று தெரியவில்லை.   பாடநூல் குழுவில் 50% இடங்களை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் எப்படி ஆக்ரமித்துக் கொண்டார்கள்?



            இக்குழுவினர் எத்தனை முறை கூடினார்கள்?  என்ன விவாதித்தார்கள்? எவ்வித முடிவுகளை எடுத்தார்கள்? என்று யாருக்கும் தெரியாது.  இணையதளம் வழியாகவும் நேரிலும் கருத்துகள் கேட்கப்பட்டதாகச் சொல்லும்போது, எத்தகைய கருத்துகள் வந்தன? அவற்றில் எவை ஏற்கப்பட்டன? பாடத்திட்டத்தில் என்ன மாற்றம் செய்யப்பட்டது? என்பதும் ரகசியமாகவே நடந்திருந்திருக்கிறது.



            முதல் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு பாடநூல் குழுவில் மொத்தம் 92 பேர் உள்ளனர்.  அதில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் 11 பேர்; முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 11 பேர்; பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியப் பயிற்றுநர்கள் 49 பேர் அங்கம் வகித்துள்ளனர்.  மேலும் ஒரு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், 5 தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள், ஒரு நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர், 14 இடைநிலை ஆசிரியர்களும் இக்குழுவில் உள்ளனர்.  மருந்துக்குக் கூட ஒரு கல்வியாளர், எழுத்தாளர், ஓவியர், சிந்தனையாளர் எவருமில்லை.  பிறகெப்படி பாடநூல் சிறப்பாக இருக்கும்?.  ட்ராட்ஸ்கி மருது போன்றவர்களை அட்டை வடிவமைப்புக்கு மட்டும் பயன்படுத்தாமல் உள்ளடக்கத்திற்கும் நூலாக்கத்திற்கும் பயன்படுத்தினால் என்ன? 



            ஆசிரியராக பணியாற்றவோர் அனைவரும் கல்வியாளர்கள் என்றால் நாடு என்றோ முன்னேறியிருக்கும்.   குறிப்பிட்ட வகுப்பிற்கு பாடம் நடத்தும் ஆசிரியர் அந்தப் பாடநூல் தயாரிப்பில் பங்கு பெறுவது சிறப்பானதுதான்.  அத்துடன் கூடவே படைப்பாளிகள், ஓவியர்கள் இடம் பெற்றிருந்தால் முழுவதும் வண்ணத்தில் அச்சிடப்பட்ட இப்புத்தகத்தின் தரம் இன்னும் மேம்பட்டிருக்கும்.   கல்விப் பணியாளர்கள் (Academicians) தவிர்த்து சுதந்திரமான நவீன சிந்தனைகளை உள்வாங்கிய படைப்பாளிகள் இக்குழுவில் இடம் பெற வேண்டும்.  தொழில் முறை ஓவியர்களைக் கொண்டு படம் வரையும் போது அது உயிரோட்டமில்லாற் போகிறது..

                      

            மனித உரிமை ஆணையங்கள், நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் போன்றவற்றில் ஓய்வு பெற்றவர்களை நியமித்து அந்த அமைப்புக்களை முடக்கிப்போடும் வேலையை அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.  அதைப் போல வல்லுநர் குழு, மேலாய்வுக் குழு போன்றவை முன்னாள் இயக்குநர்கள், கல்வி அலுவலர்கள், பேராசிரியர்களுக்கு மட்டும் இடம் பெறும் ‘முதியோர் இல்லமாக’ காட்சியளிக்கின்றன.   வயதானவர்களின் ஆளுமை மற்றும் சிந்தனைகளைப் பயன்படுத்துவதில் மாற்றுக் கருத்தில்லை.   தந்தை பெரியார் போன்ற சிந்தனையாளர்களுக்கு வயது ஒரு தடையாக இருந்ததில்லை.  கல்வித்துறையில் பதவி வகித்த காரணத்தினாலும் அரசியல் செல்வாக்கினால் மட்டுமே இவர்கள் இந்த இடங்களை கெட்டியாக தக்க வைத்துக் கொள்கின்றனர்.  இவர்கள் கடந்த காலத்திலும் தற்பொழுதும் கல்விக்காக ஆற்றிய பணிகள் என்ன?  எந்த அளவிற்கு இவர்கள் நவீன சிந்தனைகளை உள்வாங்கியவர்கள்?  என்பதெல்லாம் கேள்விக்குரியது.  ஒன்றிரண்டு பேரைத் தவிர்த்த பிறர் இக்குழுவிற்கு தகுதியற்றவர்கள் என்பதே உண்மை.  பள்ளிக் கல்வித்துறை முன்னாள் இயக்குநர் வ.ஆ. சிவஞானம் 9 புத்தகங்களையும் மேலாய்வு செய்திருக்கிறார்.   புதிய பாடத்திட்டத்தை இளைய சமூகத்திற்கு அளிக்க என்னமாய் உழைத்திருக்கிறார் பாருங்கள்!



            தயாரிக்கப்பட்டு அச்சாகிக் கொண்டிருக்கும் எஞ்சிய வகுப்பு பாடநூற்களுக்கும் இதே நிலைதான் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.   நமது அண்டை மாநிலமான கேரளத்தை ஒப்பிடும் போது நாம் கல்வியில் எவ்வளவு பின்தங்கியிருக்கிறோம் என்பது விளங்கும்.  படைப்பாளிகள், சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள் போன்றவர்களை இக்குழுக்களில் சேர்க்க வேண்டும் என்று சொல்கிற போது வேறொரு சிக்கலும் ஏற்படும்.  ஆளும் கட்சிக்கு வேண்டிய சினிமாக்காரர்களும் சின்னத்திரைக்காரர்களும் இந்த இடங்களைப் பிடித்துக் கொள்வார்கள்.  இதுதான் தமிழ்நாட்டின் அவலம்.



            இந்த இரண்டு வகுப்புகளுக்கான பாடநூற்களில் சில நேர்மறையான கருத்துகள் இல்லாமலில்லை.  அவைகள் குறித்து மேலே குறிப்பிட்ட இரு கட்டுரைகளும் அதிகம் பேசிவிட்டபடியால் மேலோட்டமான சிலவற்றை மட்டும் இங்கு பார்க்கலாம்.



            இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் பன்மைத் தன்மையை பிரதிபலிக்கும் கருத்துக்களை தேடத்தான் வேண்டியுள்ளது.  மேலே குறிப்பிட்ட குழுக்களில் ஒரே ஒரு இசுலாமியர் மட்டுமே உள்ளார்.  இந்துமதம் தவிர்த்த பிற மதங்களையும் அவைதீக பாரம்பரிய கருத்துக்களையும் பகுத்தறிவுவாதத்தையும் பன்மைத்துவ நோக்கில் இவர்கள் அணுகவேயில்லை. 

            சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் நம்மவர்கள் என்றும் களப்பிரர், பல்லவர், நாயக்கர், மராட்டியர் ஆகியோர்களை பிறர் என்றும் அறிமுகம் செய்கிறார்கள்.   இருக்கட்டும்.  சமண - பவுத்த மதங்கள் பரவிய விதம் அதனை ஆதரித்த மன்னர்கள் பட்டியலிடப்படுகின்றன.  களப்பிரர் காலத்தில் இவ்விரு மதங்கள் இருந்த நிலை, இன்னும் இருக்கின்ற பவுத்த - சமணக் கோயில்கள், சமணப்படுக்கைகள் போன்றவற்றைச் சொல்லவிடாமல் தடுப்பது எது?



            பழந்தமிழகப் பெருமை, மொழிப்பெருமை, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி என்று எதைப் பேச வந்தாலும் தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் கருத்துக்களும் பெருமையும் சேர்த்தே சொல்லப்படுகிறது.  அப்போதெல்லாம் பெயர் குறிப்பிடப்படாமல் தமிழக முதல்வர் கலைஞர் எனக் குறிப்பிடப்படுகிறது.  பாடநூல் குழுவினர் எதைத் தக்க வைப்பது என்பதிலேயே குறியாக இருந்துள்ளனர்.  நடிகைகள் மீனா, ஸ்ரேயா போன்றோர்களுக்கு இருக்கும் சுதந்திரம் கூட இவர்களுக்கு இல்லாதது வேதனைக்குரியது.  ஆட்சியாளர்கள் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் புகழ்பாடி ‘தமிழரசு’ இதழைப் போல பாடநூற்களைத் தயாரிப்பது எதிர்கால சந்ததியின் அறிவை மழுங்கடிக்கும் வேலை.



            ஆறாம் வகுப்பில் கலைஞர் உயிர்க் காப்பீட்டுத் திட்டம், அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், முழுச் சுகாதாரத் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் போன்ற திட்டங்கள் எல்லாவற்றையும் அறிமுகம் செய்து அரசின் புகழ்பாடியாயிற்று.  வரும் அடுத்தடுத்த வகுப்பு பாடநூற்களில் கலைஞர் வீட்டு வசதி திட்டம் போன்ற பிற திட்டங்கள் பட்டியலிடப்படும்.  பொருளாதார அறிமுகம் வரவேற்கப்பட வேண்டியதே.   ‘நுகர்ச்சி’ என்பதை விட ‘நுகர்வு’ என்பதே பொருத்தமாக இருக்கும்.   இதைப் போல கலைச் சொல்லாக்கக் குறைபாட்டிற்கு நிறைய உதாரணம் காட்டலாம்.



            இத்திட்டங்களை மட்டும் சொல்பவர்கள் வரும் வகுப்புகளில் பொருளாதாரப் பாடத்தில் தொடர்ச்சியாக வருவாய் பற்றிச் சொல்லும்போது இன்று அரசின் பெரும் வருவாய் ஆதாரமாக இருக்கின்ற ‘டாஸ்மாக்’ (TASMAC) பற்றியும் சொல்ல வேண்டும்.   சொல்வார்களா?  அறிவியல் பாடங்களில் ஆற்று மணலை அரசே கொள்ளையிடும் அவலத்தையும் அதனால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்புகளையும் மாணவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.  தெரிவிப்பார்களா?



            சங்கம், குமரிக் கண்டம், லெமூரியாக் கண்டம் போன்ற கருதுகோள்களை ஏற்றுக் கொண்டு பாடம் எழுதுபவர்கள் சிந்து சமவெளி எழுத்து முறையில் உள்ள சித்திர எழுத்துக்கள் தொல் - தமிழ் எழுத்துடன் உறவுடையன என்று கூறப்படுவதாக சொல்கின்றனர்.  இவ்வாறு கூறப்படுவதில் மாறுபடுவோரும் உண்டாம்.  ஆனால் மொகஞ்சதாரோவில் எடுக்கப்பட்ட பொருள்கள் அங்கு வாழ்ந்த மக்களின் சமயக் கோட்பாட்டையும் சமயப் பற்றினையும் அறிவிக்கின்றன என்று நிறுவி சிவன், சக்தி, லிங்க வழிபாட்டை உறுதி செய்கிறார்கள்.  இது மட்டும் எப்படி முடிகிறது?



            பின்லாந்து மொழியியலறிஞரான அஸ்கோ பர்போலா சிந்துவெளி எழுத்தை படித்தறிய சித்திரப்புதிர் எழுத்து முறையைக் (Rebus) கையாள்கிறார்.   தென்னாசியாவில் இருந்ததாக அறியப்படும் மொழிக் குடும்பங்களுக்குச் சொந்தமான மொழியாக இருந்திருக்கக் கூடிய ஹரப்ப மொழி அண்டை கிழக்கு மொழிகளுக்கு மாற்றாக இருந்திருக்கக்கூடிய வாய்ப்புள்ளதாக இவர் கணிக்கிறார்.  சீன - திபெத்திய மொழி இமயமலைப் பிரதேசத்திலும் புரு சாஸ்கி மொழி காரகோரம் மலைப்பகுதியில் தனிமைப்பட்டு போனதால் இவையிரண்டையும் தவிர்த்து எஞ்சியிருப்பது இந்தோ - ஈரானிய மொழியும், ஆரிய மொழிக் குடும்பமும், தென்னிந்தியாவில் இப்போது பேசப்படும் திராவிட மொழிக் குடும்பமும்தான் என்கிறார்.



            கி.மு. 2000 முதல் பேசப்பட்டு வந்த ஆரிய மொழிக் குடும்பத்திற்கும் ஹரப்ப மொழிக்கும் உறவில்லை.  ஏனெனில் சிந்து சமவெளி மக்கள் குதிரையை அறிந்திருக்கவில்லை.   எனவே ஹரப்பர்களின் மொழி திராவிட மொழிதான் என்று வரையறை செய்து சிந்து சமவெளி சித்திர எழுத்துகளின் 386 குறியீடுகளிலிருந்து நட்சத்திரம், முருகன், கார்த்திகை, வெள்ளி என சித்திர எழுத்துகளைப் படித்தறியும் புதிய முறையியலை அஸ்கோ பர்போலா அளிக்கிறார்.   இந்த சித்திர எழுத்துகள் வலமிருந்து இடமாக எழுதப்பட்டவை என்றும் ஆதாரங்களுடன் நிறுவுகிறார்.   அஸ்கோ பர்போலாவை அழைத்து விருதளித்து கோவை செம்மொழி மாநாடெல்லாம் நடத்திவிட்டு  மீண்டும் பழம் பஞ்சாங்கத்திடம் அடைக்கலமாவது எதற்கு எனத் தெரியவில்லை.



            ஐராவதம் மகாதேவன் சில மாற்றுக் கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் அஸ்கோ பர்போலாவின் ஆய்வு நேர்மையை சந்தேகிக்கவில்லை.   ஹரப்ப மொழி சித்திர எழுத்துகளை படித்தறியும் அஸ்கோ பர்போலாவின் புதிய முயற்சியை முன்னோடியாக இனம் காண்கிறார்.  இந்த மாதிரியான எவ்விதப் புரிதல்களும் இல்லாமல் எழுதப்படுபவைதான் தமிழகப் பாடநூல்கள் என்பதை ஒத்துக் கொண்டேயாக வேண்டும்.



            மகாவீரர் காலம் கி.மு. 534 முதல் கி.மு. 462 வரை எனவும் புத்தரின் காலம் கி.மு. 563 முதல் கி.மு. 483 வரை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.   சமகாலத்தவராக இருப்பினும் மகாவீரர் புத்தரை விட வயதில் மூத்தவர்.  இப்பாடநூலின்படி மகாவீரர் புத்தரை விட இளையவராகி விடுகிறார்.  புத்தரின் பவுத்தம், மற்கலியின் ஆசீவகம் ஆகியவற்றை விட முன்னர் தோன்றியது சமணம் என்பதே வரலாறு.  மயிலை.சீனி. வேங்கடசாமியின் கருத்துப்படி மகாவீரர் காலம் கி.மு. 599 முதல் 527 வரை என்பதே சரியானதாக இருக்கும்.



            “ஆங்கிலேயர் காலத்தில் ஜமீன்தார்கள் உருவாகி பெரும்பாலான நிலங்கள் ஜமீன்தாரர்களின் உடைமைகளாக மாறின” என்று சொல்லும் போது அதற்கு முன்னால் நிலங்கள் உழைக்கும் மக்களிடம் இருந்ததா? என்று கேட்கத் தோன்றுகிறது.  “விடுதலை பெற்ற இந்தியாவில் எத்தகையஅரசு அமைய வேண்டும் என்ற விவாதம் எழுந்த போது, நமது நாடு மக்களாட்சி அரசாக அமைய வேண்டும் என்று கருத்து மேலோங்கியது”, என்று புதுக்கதையளக்கிறார்கள்.



            அரசியல் நிர்ணய சபை 1946-ல் அமைக்கப்பட்டு நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே பணி தொடங்கப்பட்டு, அரசியலமைப்பு வரைவுக் குழுத் தலைவர் அண்ணல் அம்பேத்கரின் பெரும் முயற்சி மற்றும் உழைப்பால் தயாரிக்கப்பட்ட வரைவு சட்டத்தை 1949 நவம்பர் 26-ல்  அரசியல் நிர்ணய சபை ஏற்றுக் கொண்டது.   இதற்கு மாறாக சுதந்திரத்திற்குப் பிறகுதான் மக்களாட்சி அரசாக மாற வேண்டும் என்று கருத்து ஏற்பட்டதாகக் கூறுவது எவ்வளவு பெரிய புரட்டல்வாதம்.  இந்தப் பாடத்தில் குடியரசு, மக்களாட்சி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், கிரிக்கெட் விதிகளைப் போல அரசியல் சட்டத் தொகுப்பு, அரசியல் அமைப்புச் சட்டம் என்றெல்லாம் விலாவாரியாகச் சொல்பவர்கள் சொல்லாமல் விட்ட பெயர் ஒன்றுண்டு.  அந்தப்பெயர் அம்பேத்கர்.  பக்கத்துப் பக்கம் ‘கலைஞர் புராணம்’ பாடும் புத்தகத்தில் அல்லும் பகலும் உழைத்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பி அம்பேத்கரின் பெயரைக் குறிப்பிடாமல் விடுவது எந்த வகையான தீண்டாமை என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.



            இலங்கை, பர்மா (தற்போது மியான்மர் - அதைக் கூட பழைய பெயரிலேயே அழைக்கிறார்கள்), திபெத், சீனா, ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகளில் பவுத்த மதம் பின்பற்றப்படுகிறதாம்.  இந்தியாவில் பவுத்த மதத்தினர் இல்லை என்று சொல்கிறார்கள்.   இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இன்றும் பவுத்த மதத்தினர் வாழ்வதையும் சாதிக் கொடுமைகளிலிருந்து விடுபட பவுத்தம் ஒரு வழிமுறையாக இருப்பதையும் மறைக்க முடியுமா?  திபெத் புத்த மதத்தலைவர் தலாய்லாமாவுக்கும் பல்லாயிரக்கணக்கான திபெத் அகதிகளுக்கும் அடைக்கலமளித்திருக்கும் ஒரு நாட்டில் பவுத்த மதம் இல்லையென்பதை எப்படிப் புரிந்து கொள்வது?  இதைத்தான் இந்தியா - தமிழ்நாட்டின் பன்மைத் தன்மையை மறுக்கிற, மதச் சார்பின்மையை கேலிக்குள்ளாக்கும் செயல் என்று சொல்கிறோம்.  கலைஞர் காப்பீட்டுத் திட்டத்திற்கு குறிப்பு போடுபவர்கள்.  “இந்துவாகப் பிறந்தேன்.  ஆனால் இந்துவாக இறக்க விரும்பவில்லை”, என்று சொல்லி அம்பேத்கர் பெருந்திரளான மக்களுடன் பவுத்த மதத்தில் இணைந்ததை குறிப்பாக போட்டிருக்க வேண்டும்.  ஆனால் அரசியல் அமைப்புச் சட்டம் பற்றி சொல்லும் போது அம்பேத்கர் பெயரை இருட்டடிப்பு செய்பவர்களிடம் இதை எப்படி எதிர்பார்க்க முடியும்?

                      

            ஆறாம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில் ‘புரம்’ என்பதற்கு ஊர் என்று பொருள் சொல்லி ‘நாட்டுப்புறம்’ என்பதை ‘நாட்டுப்புரம்’ என்றே தொடர்ந்து பிழையாகச் சொல்லியிருக்கிறார்கள்.   தெனாலிராமன் கதையும், விவேகானந்தர் பற்றிய துணைப் பாடங்களும் நமக்கு உணர்த்த வருவதுதான் என்ன? இதிலிருந்து எப்போது விடுபடப்போகிறோம்?



            தராசுரம் கோயில் பற்றிய பாடத்தில் “தஞ்சை அரண்மனைக்குச் சொந்தமானது இக்கோயில்” என்று வருகிறது.  தஞ்சை அரண்மனையில் எந்த மன்னர் இருக்கிறார் என்ற கேள்வி மாணவர்கள் மனத்தில் எழக்கூடும்.  யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, இந்தியத் தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ள இந்த மூன்று கோயில்களும் மன்னர் மானியங்கள் ஒழிக்கப்பட்ட நிலையில் மராட்டிய இளவரசருக்குச் சொந்தமான இருக்க வேண்டிய தேவை என்ன என்று யோசிக்க வேண்டியுள்ளது.



            இன்று பல்வேறு பயிற்று முறைகள் ஒவ்வொரு வகுப்பிற்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.  1 முதல் 4 வகுப்புகளுக்கு செயல்வழிக் கற்றல் (ABL - Activity Based Learning) முறை நடைமுறையில் உள்ளது.  5-ஆம் வகுப்பிற்கு எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி (SALM - Simplified Active  Learning Methodology)
  என்ற முறையும்   6-லிருந்து 8-ம் வகுப்பு முடிய (ALM - Active  Learning Methodology) என்ற முறையும்  9-ம் வகுப்பிற்கு மட்டும் ALM+ என்ற கற்பித்தல் முறையும் பின்பற்றப்படுகிறது.  10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு வழக்கம் போல தேர்வுக்கு தயார் செய்யும் பழைய முறையும் கடைப்பிடிக்கப்படுகிறது.   இந்த நவீன கற்பித்தல் முறைகளை ஏன் 10, 12 ஆம் வகுப்புகளுக்கு அறிமுகம் செய்யவில்லை என்பது புதிராக உள்ளது.  இவ்வித கற்பித்தல் உத்திகளை பாடநூல் தயாரிப்பில் நினைவில் கொண்டதாகத் தெரியவில்லை.



            ஒன்பது பாடநூற்களில் உள்ள குறைகளைச் சொன்னால் பக்கங்கள் போதாது.  விரிவஞ்சி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.  புத்தகங்களை வண்ணத்தில் அச்சிடுவது மட்டும் போதாது.  ஓவியங்கள், படங்கள் போன்றவற்றை இன்னும் தெளிவாகவும் குழப்பத்தை ஏற்படுத்தாமலும் வடிவமைக்க வேண்டியது அவசியம்.



            ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற கல்வி அலுவலர்கள் மட்டுமே ஒரு தரமான பாடத்தைத் தயாரித்து விட முடியாது.  எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், ஓவியர்கள் போன்ற பல்வேற தரப்பாரின் ஒட்டு மொத்த முயற்சியில் நாட்டின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்கும் வழியிலும் பாடநூற்கள் தயாரிக்கப்படுவதே கல்வி தரத்தை உயர்த்தும்.   அதுவரையில் இத்தகைய பாடப்புத்தகங்களால் கல்வியில் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடப் போவதில்லை. 

1 கருத்து:

மதுரை சரவணன் சொன்னது…

நல்ல விர்வான அலசல் ... வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக